உரிமை கோரப்படாத முதலீடுகளை மீட்க விரைவில் ஒருங்கிணைந்த இணையதளம் மத்திய நிதி சேவைகள் துறை தகவல்!

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதி உள்ளிட்ட நிறுவனங்களில் பொது மக்களின் உரிமை கோரப்படாத நிதி சொத்துகள் ஏராளமாக உள்ளன. இந்த நிதி சொத்துகளை பொதுமக்கள் மீட்பதற்கு, டெப்பாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் இதுவரை உரிமை கோரப்படாமல் இருந்த ரூ.1,887 கோடி உரியவர்களிடம் திருப்பித்தரப்பட்டுள்ளது. அதேநேரம் இன்னமும் ரூ.3,201 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும், நிதி சேவைகள் துறை ரிசர்வ் வங்கியுடன் இணைந்து உரிமை கோரப்படாத தொகையை உரியவர்களிடம் ஒப்படைப்பதை விரைவுபடுத்துவதற்காக, ஒருங்கிணைந்த இணையதளம் தொடங்க திட்டமிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் சார்பில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மத்திய நிதி சேவைகள் துறை செயலாளர் நாகராஜு பேசும்போது, “நாடு முழுவதும் உள்ள வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதி உள்ளிட்ட நிறுவனங்களில் உரிமை கோரப்படாமல் உள்ள நிதி சொத்துகளை தேடி கண்டுபிடித்து மீட்பதற்காக, ஒருங்கிணைந்த இணையதளம் விரைவில் தொடங்கப்படும். உரிமை கோரப்படாமல் உள்ள பல்வேறு நிதி சொத்துகளை ஒரே தளத்தின் மூலம் (ஒற்றைச் சாளரம்) எளிதாக மீட்க இது உறுதுணையாக இருக்கும்”என்றார்.
