சான்றிதழ்களை துரிதமாக வழங்க வேண்டும்: கல்லூரிகளுக்கு யுஜிசி எச்சரிக்கை!

சென்னை: பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர். ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: நாட்டில் உள்ள சில உயர்கல்வி நிறுவனங்கள், உரிய காலக்கட்டத்துக்குள் பருவத் தேர்வுகளை நடத்துவதில்லை.பட்டப் படிப்பு சான்றிதழ்களையும் வழங்கவில்லை என்றும் யுஜிசியின் கவனத்துக்கு புகார் வந்துள்ளது. இந்த தாமதம் மாணவர்கள் தகுதியான வேலை வாய்ப்புகளை பெறவும், உயர்கல்விக்கும் இடையூறாக இருக்கிறது. யுஜிசி விதியின்படி மாணவர்கள் பட்டம் பெற தகுதி பெற்ற 180 நாட்களுக்குள், அவர்களுக்கு பட்டங்களை வழங்க வேண்டும். இந்த விதிகளை பின்பற்றாத உயர்கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
