திருவையாறில் தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனை விழா பந்தல்கால் முகூர்த்தம்

தஞ்சாவூர்: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் திருவையாறில் முக்தி அடைந்தார். இவர் பகுல பஞ்சமி தினத்தில் முக்தி அடைந்ததால் அன்றைய தினத்தில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 179-வது ஆண்டாக தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா வரும் ஜனவரி 3-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதையொட்டி பந்தக்கால் முகூர்த்தம் இன்று தியாகராஜ சுவாமிகளின் சமாதி அருகே காவிரி ஆற்றங்கரையில் நடைபெற்றது. இதில் அறங்காவலர்கள் சுரேஷ் மூப்பனார், டெக்கான் என்கே மூர்த்தி, பொருளாளர் ஆர் கணேஷ், உதவி செயலாளர்கள் கே.என். ராஜகோபாலன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அறங்காவலர் சுரேஷ் மூப்பனார் கூறியதாவது: திருவையாறில் ஆண்டுதோறும் தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் 179-வது ஆராதனை விழா வருகிற ஜனவரி 3 -ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை திருவையாறு நடைபெற உள்ளது.
இதில் உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு 7-ம் தேதி பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஒரே நேரத்தில் இசைத்து இசை அஞ்சலி செலுத்த உள்ளனர்.
இந்த விழா ஜனவரி 3-ம் தேதி மாலை 4.30 மணிக்கு மங்கல இசையுடன் தொடங்குகிறது. விழாவுக்கு சபாவின் தலைவர் ஜிகே வாசன் தலைமை வகிக்க உள்ளார் . இதில் சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பங்கேற்க உள்ளார். அன்றைய தினம் இரவு தேசிய நிகழ்ச்சிகள் 9.30 மணி முதல் 11 மணி வரை நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது.
தொடர்ந்து நாள்தோறும் காலை முதல் இரவு வரை பல்வேறு இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்த உள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை சபாவின் அறங்காவலர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் இணைந்து செய்து வருகின்றனர்.
