நாட்டின் முதல் தனியார் நிறுவன ராக்கெட் விக்ரம் 1-ஐ அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி

ஹைதராபாத்: ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் விக்ரம் 1 ராக்கெட்டை பிரதமர் மோடி நேற்று அறிமுகம் செய்தார். அதோடு ஹைதராபாத்தில் ஸ்கைரூட் நிறுவனத்தின் இன்ஃபினிட்டி வளாகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இஸ்ரோ நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானிகள் மற்றும் ஐஐடி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனம் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ். இது நாட்டின் முதல் தனியார் விண்வெளி நிறுவனம். இந்நிறுவனம் தயாரித்த விக்ரம்-எஸ் என்ற சிறிய ரக ராக்கெட் கடந்த 2022 நவம்பர் மாதம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்நிறுவனம் தற்போது செயற்கைக்கோள்களை புவியின் சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்த கூடிய ராக்கெட்டுகளை வர்த்தக ரீதியில் அனுப்ப தயாராகியுள்ளது. இந்நிறுவனம் ஹைதராாபாத்தில் 2 லட்சம் சதுர அடியில் மிகப் பெரிய வளாகத்தை அமைத்துள்ளது.
இன்ஃபினிட்டி என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த வளாகத்தை நேற்று காணொளி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதோடு ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்த விக்ரம் 1 என்ற ராக்கெட்டையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். இந்த வளாகம் மாதத்துக்கு ஒரு ராக்கெட்டை உருவாக்கும் திறன் படைத்தது என அதன் நிறுவனர் பவன் சந்தனா கூறியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகளவில் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதில் இந்தியா முன்னணி நாடாக உருவெடுக்கவுள்ளது. நாட்டின் முதல் தனியார் நிறுவனம் விக்ரம் 1 ராக்கெட்டை உருவாக்கி சாதனை படைத்திருப்பது நாட்டின் நம்பகத்தன்மை மற்றும் புதுமை கண்டுபிடிப்பின் அடையாளமாக உள்ளது. விண்வெளித்துறையின் நம்பகத்தன்மை, திறன், மதிப்பு ஆகியவற்றில் இந்தியா தனி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனர்கள் பவன் சந்தனா மற்றும் பாரத் டாகா ஆகியோர் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு மிகப் பெரிய ஊக்குவிப்பாளர்களாக உள்ளனர். விண்வெளித்துறையில் ஸ்கைரூட் போன்ற நிறுவனங்கள் முன்னணியில் இருப்பது, இத்துறையில் தனியார் நிறுவனங்களை வளர்க்க அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களுக்கு நேரடி சான்றாக உள்ளது.
தற்போது விண்வெளித்துறையில் 300-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. புதுமை கண்டுபிடிப்புகள் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கும் பரவியுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களை மட்டும் அல்லாது செமி கண்டக்டர் ஆலைகள் , டிசைன் மையங்களும் இந்தியாவில் உருவாகி வருகின்றன.
அணு சக்தி துறையையும் தனியார் நிறுவனங்களுக்கு திறந்து விடும் திட்டங்கள் மத்திய அரசிடம் உள்ளன. விண்வெளித்துறையில் 5 பெரிய நிறுவனங்கள் விரைவில் உருவாக உள்ளன. ராக்கெட் ஏவு திறனை மேம்படுத்தி, 21-ம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக ஆக்குவதுதான் லட்சியம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
