மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த இளைஞரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில், மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில், சதீஷுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை, பரங்கிமலை, காவலர் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவியும், அதே குடியிருப்பில் வசித்த சதீஷூம் காதலித்து வந்தனர். பெற்றோர் எதிர்ப்பு காரணமாக சதீஷுடன் பேசுவதை மாணவி நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு, அக்.13-ம் தேதி கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்த மாணவியை, தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்ததாக சதீஷ் கைது செய்யப்பட்டார்.
சிபிசிஐடி பதிவு செய்த இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், சதீஷுக்கு தூக்கு தண்டனை விதித்து, 2024-ம் ஆண்டு டிச.30-ம் தேதி தீர்ப்பளித்தது. மரண தண்டனையை உறுதி செய்வதற்காக வழக்கு உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சதீஷ் தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. சதீஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “தான் காதலித்தவள் வேறொருவரை திருமணம் செய்ய ஒப்புக்கொண்ட வேதனையில் திடீரென ஆத்திரத்தில் செய்த செயல். இது ஒரு திட்டமிட்ட செயல் அல்ல. மரண தண்டனை விதிக்கத்தக்க, இது அரிதிலும் அரிதான வழக்கல்ல என வாதிட்டார்.
சிபிசிஐடி தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகம்மது ஜின்னா, இது திடீரென ஆத்திரத்தில் செய்த செயல் அல்ல. இது ஒரு திட்டமிட்ட செயல். 2 நாட்களாக நோட்டமிட்டு, 3-வது நாள் ரயில் வரும் வரை காத்திருந்து, ரயில் அருகில் வந்தவுடன் தள்ளிவிட்டுள்ளார் என்பதற்கு கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளதால், தண்டனையை உறுதி செய்ய வேண்டும்.
இது திடீர் தூண்டுதலாலோ, உணர்ச்சிவசப்பட்டோ நிகழ்ந்தது அல்ல. அகங்காரம், பிடிவாதம் மற்றும் ஆணாதிக்க உணர்வில் நடந்த கொடூரமான, திட்டமிட்ட செயல்.இல்லை என சொல்வதற்கு உரிமை கொண்ட பெண், தன் எண்ணத்தை வெளிப்படுத்தும் போது அதனால் காயமடைந்த ஒரு ஆணின் அகங்காரத்தால் நடந்த கொடூரமான கொலை” என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், சதீஷுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டனர். மேலும், 20 ஆண்டுகளுக்கு எந்த தண்டனைக் குறைப்பும் வழங்கக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
