சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 42 பேர் டெல்லியில் கைது

புதுடெல்லி: ஏடிஎம் மோசடி, டிஜிட்டல் கைது உட்பட சைபர் குற்றங்களில் டெல்லியை சேர்ந்த ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. இவர்கள் டெல்லி, உத்தர பிரதேசம் ஹரியானா, மும்பை, கொல்கத்தாவைச் சேர்ந்தவர்களிடம் ரூ.245 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக டெல்லி போலீஸார் 23 வழக்குகளை பதிவு செய்தனர்.
இந்த கும்பலை பிடிக்க ‘ஆபரேஷன் சைஹாக்’ என்ற நடவடிக்கையில் டெல்லி போலீஸார் இறங்கினர். கிசன்கர் பகுதியில் உள்ள 4 தனியார் வங்கி கணக்குகள் மூலம் சைபர் மோசடி நடைபெற்றது கண்டறிப்பட்டது. இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அஸ்கர் அலி, அங்கித் சிங் ஆகியோர் முதலில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மூலம் மோசடியின் பின்னணியில் செயல்பட்ட ரவி குமார் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார்.
கோட்லா முபாரக்பூரில் கால் சென்டர்களை நடத்திய சிலரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர், லேப்டாப்கள், செல்போன்கள், மோசடி பணப் பரிமாற்றங்கள் விவரங்கள் அடங்கிய பதிவேடு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மந்தவாலி மற்றும் நஜாப்கர் ஆகிய பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர். இந்த ஆபரேஷனில், சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 42 பேர் கைது செய்யப்பட்டனர்.
